Showing posts with label சினேகா. Show all posts
Showing posts with label சினேகா. Show all posts

Monday, October 4, 2010

நடிகை சினேகாவுக்கு மீண்டும் ஆபாச SMS


நடிகை சினேகா சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் வசித்து வருகிறார். சினேகாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்கள் அனுப்பியதாக ஏற்கனவே பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சைபர்கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர். 45 நாட்கள் சென்னை புழல் மத்திய ஜெயிலில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீது சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது 11-வது கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நடிகை சினேகாவும் கோர்ட்டில் ஆஜராகி கண்ணீர்மல்க சாட்சியம் அளித்தார். ஆனால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராகவேந்திரா வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஒழுங்காக ஆஜராவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை சினேகாவின் தந்தை ராஜாராம் நேற்று பகல் 12 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், ஏற்கனவே தொல்லை கொடுத்த ராகவேந்திரா மீண்டும் நடிகை சினேகாவுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி வருவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எம்.எஸ். தகவலில் `என்றைக்கும் நான்தான் உன் கணவன்' என்றும், மேலும் அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாச வார்த்தைகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்களால் நடிகை சினேகா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி சென்னை உளவுப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்களை உண்மையிலேயே ராகவேந்திரா தான் அனுப்பியிருக்கிறாரா? அல்லது அவரது பெயரில் வேறு யாராவது அனுப்புகிறார்களா? என்று உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

உண்மையிலேயே ராகவேந்திரா அனுப்பியிருந்தது தெரிய வந்தால் அவர் மீது மீண்டும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.